பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதால் உண்டான அதிர்ச்சியே இன்னும் நீங்கவில்லை. அதற்குள் மற்றொரு நடிகர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கன்னட தொலைக்காட்சி நடிகர் சுசீல் கெளடா, மாண்டியாவில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 30. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. நடிகராக மட்டுமல்லாமல் உடற்பயிற்சி நிபுணராகவும் சுசீல் இருந்துள்ளார். அந்தப்புரா என்கிற கன்னடத் தொலைக்காட்சித் தொடரில் நடித்து கவனம் பெற்றிருந்தார். அடுத்ததாக திரையுலகிலும் முத்திரை பதிக்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.
சுசீல் கெளடாவின் மரணம் கன்னடத் திரையுலகில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சுசீல் நடித்து விரைவில் வெளிவரவுள்ள சலகா படத்தின் இயக்குநர் துனியா விஜய் ஃபேஸ்புக்கில் எழுதியதாவது:
முதலில் அவரைப் பார்த்தபோது கதாநாயகனுக்குரிய பிம்பமே உருவானது. படம் வெளிவருவதற்குள் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். என்ன பிரச்னை இருந்தாலும் தற்கொலை செய்துகொள்வது என்பது எதற்கும் தீர்வாகாது. கரோனா வைரஸைக் கண்டு மட்டும் அனைவரும் பயப்படவில்லை. வருமானம் அளிக்கும் வேலை வாய்ப்பு தற்போது இல்லாததால் மக்கள் நம்பிக்கையை இழக்கிறார்கள். இந்தக் கடினமான சூழலை வலுவான மனத்துடன் எதிர்கொள்ளவேண்டும் என்றார்.
தொலைக்காட்சித் தொடரில் சுசீலுடன் நடித்த அமிதா கூறியதாவது: சுசீல் உயிடன் இல்லை என்பதை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அருமையான மனிதர். கோபமும் அவருக்கு வராது. திரைத்துறையில் சாதிப்பதற்கான திறமை அவரிடம் இருந்தது என்றார்.