ரூ. 100 கோடி வசூல் எல்லாம் இனி கிடையாது: பிரபல இயக்குநர்

முதல் வாரத்திலேயே 100 கோடி வசூல் அள்ளுகிற படம் என்கிற அதீத விளம்பரம் இனி இருக்காது.
ரூ. 100 கோடி வசூல் எல்லாம் இனி கிடையாது: பிரபல இயக்குநர்

ஓடிடி தளங்களில் படங்கள் நேரடியாக வெளியாவதால் திரையரங்கு வசூல் சார்ந்த நட்சத்திர அந்தஸ்து இனி இருக்காது என்று பிரபல இயக்குநர் சேகர் கபூர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத நிலையில், சினிமாவை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனா். திரையரங்குகளும் இயங்காததால் படங்கள் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவால் திரையரங்குகளில் படங்கள் வெளியாவது குறித்து தெளிவான நிலை இல்லாததால் நேரடியாக ஓடிடி தளங்களில் படங்களை வெளியிடத் தயாரிப்பாளர்கள் முயன்று வருகிறார்கள்.

அக்‌ஷய் குமார், அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், ஆலியா பட், வருண் தவான் என பெரிய நடிகர்கள் நடித்த ஏழு ஹிந்திப் படங்கள் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. 

இதை முன்வைத்து பிரபல இயக்குநர் சேகர் கபூர் கூறியதாவது:

குறைந்தபட்சம் அடுத்த ஒரு வருடத்துக்குத் திரையரங்குகளைத் திறக்க முடியாது. எனவே முதல் வாரத்திலேயே 100 கோடி வசூல் அள்ளுகிற படம் என்கிற அதீத விளம்பரம் இனி இருக்காது. திரையரங்கு வசூல்களைச் சார்ந்த நட்சத்திர அந்தஸ்து செத்துவிட்டது.

நட்சத்திரங்கள் ஓடிடி தளங்களை நாட வேண்டிய நிலைமை உள்ளது. இல்லாவிட்டால் அவர்கள் தங்களுடைய சொந்த செயலியில் படத்தை வெளியிட வேண்டும். தொழில்நுட்பம் மிகவும் எளிமையானது என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com