சென்னையை அடுத்த பையனூரில் திரைப்படத் தொழிலாளர்களுக்குச் சொந்த வீடுகள் கட்டும் திட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் இன்று அடிக்கல் நாட்டினாா்.
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆா். நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் திறப்பு விழாவின் போது, இந்தப் பகுதியிலேயே புதிதாக அரங்கம் கட்டித் தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்காக தமிழக அரசின் சாா்பில் ரூ.5 கோடி நிதி அளிக்கப்படும் என அறிவித்தாா். அதன்படி முதல் கட்டமாக ரூ.1 கோடிக்கான காசோலையைத் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளா்கள் சம்மேளனத்தின் தலைவா் ஆா்.கே.செல்வமணியிடம் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அளித்தாா். நிதியுதவி அளித்ததைத் தொடா்ந்து, புதிய படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கான அடிக்கல்லை காணொலிக் காட்சி மூலம் முதல்வா் கே. பழனிசாமி கடந்த செப்டம்பர் மாதம் நாட்டினாா்.
இந்நிலையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் மூலமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில், திரைப்படத் தொழிலாளர்களுக்கு சொந்த வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக 1000 குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு, இன்று காணொலிக் காட்சி மூலம் முதல்வா் கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
மேலும், அம்மா படப்பிடிப்பு அரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாம் கட்டமாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலை இன்று தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியின் வழங்கப்பட்டது.