கிரிக்கெட் வீரர் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்ட படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், 2016 செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.
இந்தப் படம் 2011 உலகக் கோப்பையில் தோனி சிக்ஸர் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவி, உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதோடு முடிந்துவிடும்.
படம் வெளியான சமயத்தில் இதன் இரண்டாம் பாகம் பற்றி பேச்சு எழுந்தது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் தோனி. அப்போது அவர் சொன்ன சுவாரசியமான காரணம் இதுதான்:
முதலில் தோனி படத்தைத் தொடங்கியபோது எதை வைத்து படம் எடுப்பார்கள் என நினைத்தேன். ஏனெனில் என் வாழ்க்கையில் வில்லன்கள் கிடையாது. என் வாழ்க்கை குறித்த தகவல்களை இந்தப் படம் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் இந்தப் படத்துக்கு இரண்டாம் பாகம் வேண்டாம். ஏனெனில் அது சர்ச்சைக்குரியதாக இருக்கும். 2011-க்குப் பிறகு சர்ச்சைகள் மட்டும்தான் உள்ளன. என் வாழ்க்கையில் அதைத்தவிர வேறெதுவும் இல்லை. வில்லன்கள் மட்டும்தான் உள்ளார்கள் என்று கூறினார்.
ஒருவேளை இரண்டாம் பாகத்துக்கு தோனி அனுமதியளித்திருந்தால் தோனி வேடத்தில் சுசாந்த் சிங் தான் மீண்டும் நடித்திருப்பார்.
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
திரைத்துறை மீதான ஆா்வத்தில் பொறியியல் படிப்பை பாதியில் கைவிட்ட சுசாந்த் சிங் ராஜ்புத், நடனம் மற்றும் நடிப்புக் கலைகளை முறைப்படி கற்று, திரைத் துறைக்குள் நுழைந்தாா். ஆரம்பத்தில் நடனக் கலைஞராகவும், சிறிய வேடங்களிலும் நடித்து வந்த அவா், 2013-இல் ‘காய் போ சே’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானாா். அதன் பிறகு, ‘சுத் தேசி ரொமான்ஸ்’, ‘ராப்டா’, ‘கேதா்நாத்’, சொன்சிரியா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவா், கிரிக்கெட் வீரா் எம்.எஸ். தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானாா்.
கரோனா பொது முடக்கம் காரணமாக மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது இல்லத்தில் தங்கியிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.