மும்பை: இந்தக் குழந்தையால் அதைத் தாண்டி வர இயலவில்லை என்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் தோனி குறித்த பாலிவுட் படத்தில் நடித்தவரான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிறன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட்டில் மட்டுமல்ல; நாடுமுழுவதும் பரவலாக அதிர்ச்சியலைகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்தக் குழந்தையால் அதைத் தாண்டி வர இயலவில்லை என்று பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரணம் குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
திரையிலகில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்ளும் போக்கினை எனது சினிமா வாழ்க்கையில் தொடர்ந்து அனுபவித்து வந்திருக்கிறேன். நான் அதிலிருந்து தப்பிப் பிழைத்து விட்டேன். எனது காயங்கள் ஆழமானவை. ஆனால் இந்தக் குழந்தை, சுஷாந்த்தால் அதைத் தாண்டி வர இயலவில்லை. இதிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வோமா? இதகைய கனவுகள் சிதைவதை தடுத்து நிறுத்த நாம் ஒன்றுபடுவோமா? #கேட்கிறேன்
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். அத்துடன் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட்டில் நிலவும் இத்தகைய போக்குகள் குறித்து சுஷாந்த் சிங் பேசும் விடியோ காட்சியையும் அவர் இணைத்துள்ளார்.