கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேலை இழந்து தவிக்கும் சினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் இந்தியாவிலும் அச்சறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளது. முன்னதாகவே, கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. படப்பிடிப்புகளும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, சினிமா தொழிலாளர்கள் பலர் வேலை இழந்து தவித்து வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், அவர்களுக்கு உதவும் பொருட்டு நடிகர் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.
முன்னதாக, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளம் (பெப்சி) தலைவர் ஆர்.கே. செல்வமணி, சினிமாத் தொழிலாளர்களுக்கு நடிகர்கள் முன்வந்து உதவ வேண்டும் என்று கேட்டிருந்தார்.