கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலையின்றி அவதிப்படும் ஆயிரக்கணக்கான சின்னத்திரை தொழிலாளர்களுக்கு உதவும்படி சின்னத்திரை சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரைப்படப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பெப்சி சங்க தொழிலாளா்கள் பிரச்னையைச் சந்தித்து வருவதைச் சுட்டிக்காட்டி, அவா்களுக்கு உதவ நடிகா்கள் முன்வர வேண்டுமென அந்தச் சங்கத்தின் தலைவா் ஆா்.கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்திருந்தாா். இதையடுத்து பெப்சி அமைப்புக்குப் பல்வேறு நடிகர்களும் உதவி செய்துவருகிறார்கள்.
இந்நிலையில் படப்பிடிப்பு ரத்து காரணமாக அவதிப்படும் ஆயிரக்கணக்கான சின்னத்திரை குடும்பங்களுக்கு உதவும்படி சின்னத்திரை சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் தளபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால் இந்தத் தொழிலை நம்பி வாழும் சின்னத்திரைக் கூட்டமைப்பைச் சேர்ந்த உதவி இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், படத்தொகுப்பாளர்கள், ஒலிப்பதிவாளர்கள் ஆகியோர் மிகவும் பாதிக்கப்பட்டு, அன்றாடத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
பெரிய திரையைச் சேர்ந்த தயாரிப்பாளர்களும் நடிகர்களும் பெப்சி மூலமாக உதவி செய்து வருவது ஆறுதலாக உள்ளது. அதேபோல், சின்னத்திரையின் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு பண உதவியோ பொருளுதவியோ செய்தால் இக்கட்டான சூழலில் பேருதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.