சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 27,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 800 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரங்கு கடைபிடிக்கப்படுவதால் வெளியே எங்கும் செல்லமுடியாத நிலையில் விராட் கோலிக்கு அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா சிகை திருத்தம் செய்துள்ளார். இதுபற்றிய விடியோவை அனுஷ்கா சர்மா வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் கோலி கூறியதாவது:
தனிமைப்படுத்தலில் இருக்கும்போது இதுதான் நடக்கும். இதுபோன்று நடப்பதை நாம் அனுமதிக்கிறோம். சமையலுக்குப் பயன்படும் கத்திரிக்கோலை வைத்து சிகை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. என் மனைவி அருமையாகச் சிகை திருத்தம் செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளார்.