திருப்பதி: கரோனா நோய் தொற்று குறித்து திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக டோலிவுட்டில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சாதாரணமாக, நாட்டில் நிலவி வரும் பல்வேறு சூழ்நிலைகளைத் தழுவி பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வரும் கரோனா குறித்தும் திரைப்படம் வெளிவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் வெளியான கல்கி திரைப்படத்தின் இயக்குநர் பிரசாந்த் வர்மா, ஒரு பயங்கரமான வைரஸ் கிருமி மக்களை தொற்றிக் கொண்டால் அதனால் ஏற்படும் விபரீதங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை மையமாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. புதுமுகங்களை வைத்து மட்டுமே இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படத்திற்கு கரோனா என்று பெயர் வைக்க இயக்குநர் பிரசாந்த் வர்மா முடிவு செய்துள்ளார் என்று டோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 27,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 800 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.