ஊரடங்கு விதிகளை மீறியதாக நடிகை பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு அதிகமாக உள்ளதால் மே 17-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில் காரணமின்றி மும்பை மரைன் டிரைவ் பகுதியில் காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டே மீது மும்பைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மும்பைக் காவல்துறையின் ஆய்வாளர் ஹிரேமத் ஒரு பேட்டியில் கூறியதாவது:
பூனம் பாண்டே மற்றும் சாம் அஹமத் ஆகிய இருவர் மீதும் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 2 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 67,100 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.