அன்னையர் தினத்துக்காக நடிகை நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று கொண்டாடப்பட்ட அன்னையர் தினத்துக்காக முதலில் தன் தாயைப் பற்றி ஒரு பதிவு எழுதினார் விக்னேஷ் சிவன். இதன்பிறகு நயன்தாராவின் தாயின் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கும் வாழ்த்து கூறினார். அடுத்ததாக நயன்தாராவின் புகைப்படத்தையும் வெளியிட்டு, என் வருங்காலக் குழந்தைகளின் அன்னைக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நானும் ரெளடி தான் படத்தின் உருவாக்கத்தின் போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலர்கள் ஆனார்கள். எனினும் தங்களுடைய காதலைப் பற்றி இருவரும் வெளிப்படையாகப் பேசியதில்லை. இருவரும் ஒன்றாக இணைந்த புகைப்படங்களைச் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது வெளியிடுவார் விக்னேஷ் சிவன். காதல் பற்றிய மறைமுகப் பதிவுகளும் அவ்வப்போது வெளிவரும். இந்நிலையில் தன்னுடைய வருங்காலக் குழந்தைகளின் தாயான நயன்தாராவுக்கு வாழ்த்துகள் என இன்ஸ்டகிராமில் கூறியுள்ளார்.
போடா போடி, நானும் ரெளடி தான், தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்களை இயக்கியுள்ள விக்னேஷ் சிவன், அடுத்ததாக, காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு காதலர் தினத்தன்று வெளியானது. விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் இப்படத்துக்கு இசை - அனிருத். தயாரிப்பு - லலித் குமார்.