அறிமுக இயக்குநர் அருண் பிரசாத்தின் மறைவுக்குத் தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார்.
ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெங்கட் பாக்கர் என்கிற பெயரில் அருண் பிரசாத் இயக்கியுள்ள படம் - 4ஜி. இரண்டு வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பு முடிவடைந்தாலும் இந்தப் படம் இன்னமும் வெளியாகவில்லை. பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக அருண் பிரசாத் பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் அருண் பிரசாத் உயிரிழந்துள்ளார். அன்னூரைச் சேர்ந்த அருண் பிரசாத் நேற்று காலையில் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தார். திடீரென எதிரே வந்துகொண்டிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். தான் இயக்கிய முதல் படம் திரையரங்குகளில் வெளியாவதைக் காணும் முன்பே அவருடைய வாழ்க்கை முடிந்துவிட்டது. இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் பலரும் அருண் பிரசாத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.
அருண் பிரசாத்தின் நண்பரும் இயக்குநருமான இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார், தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:
நண்பா, என்னை ஹீரோ மாதிரி எடுடா-ன்னு சொன்னியே... உன்னை அவ்ளோ ரசிச்சு நான் எடுத்த இந்த போட்டோவை உனக்கு அஞ்சலி போட்டோவா போட வெச்சிடியேடா நண்பா! தினமும் எவ்ளோ பேசியிருப்போம்! எத்தனை ஆசைகளை சொன்ன... உன்னோட கனவுகளையெல்லாம் காத்துல போயிடுச்சே ஐய்யோ... என் வெற்றியை உன்னோட வெற்றியா கொண்டாடுற உன் இடத்தை யார்டா நிரப்புவா? உங்கம்மாவ என்ன சொல்லி தேத்துறது? போடா டேய்.. என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.