2010-ல் சிம்பு, த்ரிஷா நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் மனத்தை கொள்ளை கொண்ட படம் - விண்ணைத் தாண்டி வருவாயா.
இந்நிலையில் இப்படத்தின் தொடர்ச்சியாக 12 நிமிடக் குறும்படத்தை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். ஊரடங்கு காலத்தில் சிம்புவும் த்ரிஷாவும் அவரவர் வீடுகளில் இருந்து தொலைபேசி வழியாக உரையாடும் விதத்தில் முழு நீளக் குறும்படமும் உருவாக்கப்பட்டுள்ளது. இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
படத்துக்காக கதை எழுத உட்காரும் சிம்புவுக்குத் தொடர்ந்து எழுதுவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடனே கேரளாவில் உள்ள த்ரிஷாவைத் தொலைபேசியில் அழைத்துப் பேசுகிறார். அவரவர் வாழ்க்கை குறித்தும் காதல் நிலை குறித்தும் இருவரும் விவாதிக்கிறார்கள். நீ வேண்டும் என்கிறார் சிம்பு. நீ என்னுடைய மூன்றாவது குழந்தை என்கிறார் த்ரிஷா. பேசி முடித்தவுடன் சிம்பு புது உற்சாகம் அடைந்து தொடர்ந்து எழுதுகிறார் எனக் கதையை அமைத்து இயக்கியுள்ளார் கெளதம் மேனன்.