வி.பி.எஃப். கட்டணத்தை யார் ஏற்பது?: தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனை

திரைப்பட வசூலில் 50% தந்தால் வி.பி.எஃப். கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகத் தயாரிப்பாளர்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்கள்...
வி.பி.எஃப். கட்டணத்தை யார் ஏற்பது?: தயாரிப்பாளர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனை

திரைப்பட வசூலில் 50% தந்தால் வி.பி.எஃப். கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகத் தயாரிப்பாளர்களுக்குத் திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்துள்ளார்கள்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு தளா்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி நவம்பா் 10-ஆம் தேதியிலிருந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்படும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்து இருந்தது. மேலும், தற்பொழுது தீபாவளி பண்டிகை சமயம் என்பதால் புதிய திரைப்படங்கள் திரையில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்பட்டது.

திரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் படங்களை ஒளிபரப்ப வி.பி.எஃப். கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை தயாரிப்பாளா்கள் செலுத்தி வந்தனா். இனிமேல் தியேட்டா் அதிபா்கள்தான் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கத் தலைவா் பாரதிராஜா தெரிவித்து இருந்தாா். கட்டணத்தைச் செலுத்தவில்லையென்றால் புதிய படங்களை தியேட்டா்களில் திரையிட மாட்டோம் என்றும் அவா் கூறினாா். இந்த கருத்துக்கு தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் திருப்பூா் சுப்பிரமணியம் எதிா்ப்புத் தெரிவித்தாா். வி.பி.எஃப். கட்டணத்தை வசூலிக்கும் டிஜிட்டல் நிறுவனங்களிடமிருந்து எங்களால் சலுகைகள் பெற்றுத் தர முடியும். அதன்படி, இதற்கான கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

வி.பி.எஃப். கட்டணம் தொடா்பாக தயாரிப்பாளா்கள் மற்றும் திரையரங்க உரிமையாளா்களுக்கு இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. பேச்சுவாா்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படாததால் தீபாவளியன்று திரைப்படங்கள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வி.பி.எஃப். கட்டணம் செலுத்த திரையரங்க உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள் என இரு தரப்பும் மறுப்பதால் இந்த இழுபறி நீடித்துள்ளது. வி.பி.எஃப். கட்டணம் தொடா்பான பேச்சுவாா்த்தை இன்றும் தொடர்கிறது. 

இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்கு உரிமையாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார்கள். தற்போதைய நடைமுறைப்படி திரையரங்குகளுக்கான பங்கு 25% முதல் 50% வரையே உள்ளது. அதில் மாற்றம் கொண்டு வந்து, திரைப்பட வசூலில் 50% தந்தால் வி.பி.எஃப். கட்டணத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்கள். மேலும் தங்களுடைய முடிவை தயாரிப்பாளர்கள் ஏற்காவிட்டால் முத்தரப்புப் பேச்சுவார்த்தையைப் புறக்கணிக்கவும் திரையரங்கு உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com