தனது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவதையே தாம் விரும்புவதாக கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான அருண் விஜய் கோவை நட்சத்திர ஹோட்டலில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தற்போது சினம் படத்தில் நடித்துள்ளேன். திரையரங்குகளில் இந்த படம் விரைவில் வெளியாகும். அக்னிச்சிறகுகள் திரைப்படம் அடுத்து வெளிவர உள்ளது. இது ரஷியா, கஜகஸ்தான் ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு புது அனுபவத்தைத் தரும். ஓடிடி ஒரு நல்ல தளம். இருந்தாலும் திரையரங்குகளில் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வேறுவிதமானது. எனவே, எனது திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளிலேயே வெளியிட விரும்புகிறேன். இதனால் ஓடிடி பற்றி யோசிக்கவில்லை.
அடுத்த ஆண்டு நான் மிகவும் விரும்பும் திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளிவரும். மணிரத்தினம் உள்ளிட்ட பல்வேறு இயக்குநர்களுடன் நடித்து விட்டேன். திரையுலகுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிறது. பல்வேறு இயக்குனர்களுடன் நடிக்க விரும்புகிறேன். இயக்குனர் ஷங்கர் படத்தில் நடிக்க விருப்பம் உள்ளது. கதாநாயகன், வில்லன் இரண்டிலும் நடிக்க எனக்கு விருப்பம். வில்லன் கேரக்டர் செய்வது சவாலானது. என்னை அறிந்தால் திரைப்படத்தில் விக்டர் கேரக்டருக்கு பின்னர் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. எனவே ஒவ்வொரு படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன் என்றார்.