முன்னாள் காதலி புகார்: பிக்பாஸில் கலந்து கொண்ட மாடல் மீது வழக்குப்பதிவு
சென்னை: முன்னாள் காதலி அளித்த புகாரின் பேரில் பிக்பாஸில் கலந்து கொண்ட மாடல் தர்ஷன் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல மாடல் அழகியும், நடிகையுமானவர் சனம் ஷெட்டி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இருபதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மாடலும் நடிகருமான தர்ஷன் மீது சனம் ஷெட்டி புகார் அளித்திருந்தார்.
அவர் தனது புகாரில், ‘தானும் தர்ஷனும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், தங்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் , பின்னர் தன்னைத் திருமணம் செய்ய தர்ஷன் மறுத்தாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பணம் கேட்டு தன்னை அவர் மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ள சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர் தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி மற்றும் பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.