தலைவி படத்துக்காக 20 கிலோ அளவுக்கு உடல் எடையை அதிகரித்ததாக நடிகை கங்கனா கூறியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சுயசரிதைத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.
விஜய் இயக்கி வரும் இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
கரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தலைவி படம் பற்றி நடிகை கங்கனா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:
தலைவி படத்துக்காக 20 கிலோ உடல் எடையை அதிகரித்துள்ளேன். இப்போது படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே என்னுடைய பழைய அளவு, வேகம், வளர்சிதை மாற்றம், நெகிழ்வுத் தன்மைக்குப் போக வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்து நடைப்பயிற்சி/ஓட்டத்துக்குச் செல்கிறேன். யாரெல்லாம் என்னைப் போல் செய்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.