சுசாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக திரையுலகினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு நடிகையும் சமாஜ்வாதி கட்சி உறுப்பினருமான ஜெயா பச்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் 72 வயது ஜெயா பச்சன் பேசியதாவது:
திரைப்படங்கள் மூலமாகப் பேரும் புகழும் பெற்றவர்கள் தான் இன்று அதை சாக்கடை என்கிறார்கள். திரைத்துறை தான் பலருக்கும் பேரும் புகழையும் அளித்துள்ளது. திரைத்துறையின் நற்பெயரைக் கெடுக்க முயல்கிறார்கள். திரைத்துரை பலருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கிறது. பலர் மிக அதிகமாக வருமான வரி செலுத்துகிறார்கள். ஒருசிலரால் ஒட்டுமொத்த துறையையும் தவறாகப் பேசக்கூடாது. மக்களவையில் திரைத்துறைச் சேர்ந்த ஒருவர் (ரவி கிஷன்) திரைத்துறைக்கு எதிராகப் பேசியதை அவமானமாகக் கருதுகிறேன் என்றார்.
கிரிக்கெட் வீரர் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை மையமாக முன்வைத்து உருவாக்கப்பட்ட படம், எம்எஸ் தோனி - தி அன்டோல்ட் ஸ்டோரி. தோனி வேடத்தில் சுசாந்த் சிங் ராஜ்புத் நடித்தார். இயக்கம் - நீரஜ் பாண்டே. இந்தப் படம், 2016 செப்டம்பர் 30-ம் தேதி வெளியானது.
சுசாந்த் சிங், மும்பை பந்த்ரா புகா் பகுதியில் அமைந்துள்ள அவருடைய அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்தாா். சுசாந்த் சிங்கின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சிபிஐ சிறப்புக் குழு, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
நடிகா் சுசாந்த் சிங் மரணத்தை அடுத்து மும்பையைப் பாதுகாப்பற்ற நகரமாக உணருவதாக பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியிருந்தார். மேலும், ஹிந்தி திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பது குறித்தும், மும்பை போலீஸாா் குறித்தும் கங்கனா தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தின.