மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தன்னுடைய ரசிகருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் ரசிகர் ஒருவர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ரஜினியிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:
தலைவா என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு மிகச்சிறந்த தலைவனாகவும் தந்தை மற்றும் ஆன்மீகக் குருவாகவும் வீரநடை போட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் ரூ. 25,000 என்கிற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற ஒரே வருத்தம் என்று ட்வீட் வெளியிட்டிருந்தார்.
இந்த ட்வீட் மற்றும் ரசிகரின் உடல்நிலை பற்றி அறிந்த ரஜினி, தனது ரசிகருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினி கூறியுள்ளதாவது:
முரளி, நான் ரஜினிகாந்த் பேசுகிறேன். உங்களுக்கு ஒன்றும் ஆகாது கண்ணா. தைரியமாக இருங்கள். நான் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். சீக்கிரம் குணமடைந்து வீட்டுக்கு வருவீர்கள். குணமடைந்தவுடன் தயவுசெய்து குடும்பத்துடன் என் வீட்டுக்கு வாருங்கள். நான் உங்களைப் பார்க்கிறேன். தைரியமாக இருங்கள். நான் ஆண்டவரை வேண்டிக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.
ரசிகருக்காக ரஜினி பேசிய ஆடியோ, சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.