பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகரும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி அன்று கொரோனா தொற்றால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சுமார் ஐம்பத்து நாட்களுக்கு மேலாகச் சிகிச்சை பெற்ற நிலையில் கடந்த 24-ஆம் தேதி அன்று இரவு மிக மோசமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பல்வேறு சிகிச்சைகள் அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் 1.04 மணி அளவில் எஸ்.பி.பி. உயிரிழந்தார்.
இந்த நிலையில் அவரது உடல் திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தாமரைப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், நடிகர்கள் விஜய், ரகுமான், அர்ஜுன், மயில்சாமி மற்றும் அரசியல் துறையைச் சார்ந்த தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், திமுக பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், ஆந்திரா நீர் வள மேலாண்மை துறை அமைச்சர் அனில்குமார் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்று எஸ்.பி.பி. உடலுக்கு மலர்வளையம் வைத்து அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர். இதில் எல்லாபுரம் ஒன்றிய கழக அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன், பாடகர் மனோ, மாவட்ட கவுன்சிலர் அம்மினி மகேந்திரன், திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கோடு வெள்ளி குமார் மற்றும் தாமரைப்பாக்கம் ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் ஊராட்சி மன்றத் தலைவர் துளசி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.