கதையில் சில மாற்றங்கள் செய்து கமல் நடித்த ஆளவந்தான் படத்தை மீண்டும் வெளியிடும் முயற்சியில் இறங்கியுள்ளார் தயாரிப்பாளர் தாணு.
சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தாணு தயாரிப்பில் கமல் இரட்டை வேடங்களில் நடித்த ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. ரவீணா டாண்டன், மனிஷா கொய்ராலா போன்றோரும் நடித்திருந்தார்கள்.
இந்நிலையில் ஆளவந்தான் படத்தை சில மாற்றங்களுடன் மீண்டும் வெளியிட முடிவு செய்துள்ளார் தயாரிப்பாளர் தாணு. ஃபிலிம் கம்பானியன் செளத் இணைய இதழுக்காக பரத்வாஜ் ரங்கனுக்கு அளித்த பேட்டியில் தயாரிப்பாளர் தாணு கூறியதாவது:
ஆளவந்தான் - சொன்ன கதை ஒன்று, எடுத்த கதை ஒன்று. முடித்த கதை ஒன்று. அது ஒரு குழப்பமான கதை. இப்போது சொல்கிறேன். ஆளவந்தான் கதையை மீண்டும் நான் எழுதுகிறேன். நானே எடிட் செய்து, அந்தப் படத்தை வெளியிட்டு, உச்சத்துக்குக் கொண்டு செல்லப் போகிறேன். இப்போது இதைச் செய்யப் போகிறேன். படம் இரண்டே முக்கால் மணி நேரம். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பின்னால் வரக் கூடிய கதையை கமல் முன்பே சிந்தித்துவிட்டார். பரீட்சார்த்த முயற்சியாக அவரே படத்தை எடுத்திருக்கலாம். என்னை எடுக்க வைத்துவிட்டார் என்று கூறியுள்ளார்.