திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்குத் பாலிவுட் பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
இந்தியாவில் உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு இந்தியத் திரைப்படத் தணிக்கை வாரியம், தணிக்கை செய்து சான்றிதழ் வழங்கி வருகிறது. படத்துக்குத் தணிக்கை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் படத் தயாரிப்பாளர் மேல்முறையீடு செய்யலாம்.
இந்நிலையில் 1983-ல் அமைக்கப்பட்ட திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் இனி செயல்படாது என மத்திய சட்ட சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதையடுத்து தணிக்கை வாரியத்தின் முடிவுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் தான் இனிமேல் மேல்முறையீடு செய்ய முடியும்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பாலிவுட் பிரபலங்கள் அனுராக் காஷ்யப், விஷால் பரத்வாஜ் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்கு முடிய நீண்ட காலமாகும், இதனால் துணிச்சலான கதைகளை எடுக்க இயக்குநர்கள் தயங்குவார்கள் என அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். திரைப்படத்துறையின் வேதனையான நாள் என இயக்குநர் விஷால் பரத்வாஜ் கூறியுள்ளார்.