சுல்தான் படத்தின் கதையைக் கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
சுல்தான் படம் வெற்றி பெற்றதற்காக நன்றி கூறும் விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் கார்த்தி பேசியதாவது:
இப்படத்தின் கதையை கேட்கும்போது நான் 10 வயது சிறுவனாக உணர்ந்தேன். நான் என்ன சொன்னாலும் கேட்பதற்கு 8 அடியில் கடா மாதிரி ஒரு பாத்திரம். அதேபோல், குள்ளமாக ஒரு பாதுகாவலர். இதுபோக, 100 அடியாள்கள். என்னைப் பாதுகாப்பது தான் அவர்களின் வேலை. எப்போதும் என்னைச் சுற்றியே இருப்பார்கள் என்று கேட்கும்போது கற்பனைக் கதை போல தோன்றியது. அனைவரும் அதை விரும்புவோம்.
லால் சார் கண்டிப்பாக இப்படத்தில் நடிக்க வேண்டும் என்றார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன். அவர் கூறியதைப் போல லால் சார் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
மயில்சாமியின் நகைச்சுவையை நான் மிமிக்ரி செய்ய முயற்சி செய்யும் அளவிற்கு நன்றாக இருக்கும். அதேபோல, யாருக்கு என்ன தேவையோ அதைக் கடன் வாங்கியாவது செய்யக் கூடியவர். எம்.ஜி.ஆரின் குணத்தைப் பின்பற்றி வருகிறார்.
இப்படம் பார்க்க திரையரங்குக்குக் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். குழந்தைகள் ஆரவாரத்துடன் பார்த்து மகிழ்வதாக என்னிடம் தொடர்புக் கொண்டு கூறும்போது மழ்ச்சியாக இருக்கிறது. மேலும், இப்படம் திரையரங்கிற்கான படம். அதற்காக 3 வருடங்கள் பொறுமையாக இருந்து வெளியிட்ட தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவிற்கு நன்றி. ஓடிடியில் இப்படத்தை வெளியிட்டிருந்தால் இந்த அளவுக்குப் பாராட்டுக்கள் வந்திருக்காது. அதேபோல், பாதுகாப்போடு ஒரு திரைப்படத்தை திரையரங்கில் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.