திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே அனுமதி: தமிழக அரசு உத்தரவு
கரோனா பரவலைத் தடுக்க திரையரங்குகளில் மீண்டும் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 3,986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.சென்னையில் மட்டும் 1459 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதையடுத்து கரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உள்பட அனைத்து திரையரங்குகளும் 50 விழுக்காடு இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.