சென்னை: ‘அண்ணாத்த’ படப்பிடிப்புக்காக, சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு நடிகா் ரஜினிகாந்த் வியாழக்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.
சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, நயன்தாரா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகி வரும் படம் ’அண்ணாத்த’. சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோா் பணிபுரிந்து வருகின்றனா்.
கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது. டிசம்பரில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டபோது, அங்கு கரோனா பரவலால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ரஜினிக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னைக்குத் திரும்பிய ரஜினிகாந்த் ஓய்வில் இருந்தாா்.
தற்போது ஹைதராபாத்தில் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் மீண்டும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த், வியாழக்கிழமை காலை தனி விமானத்தில் ஹைதராபாத் சென்றாா். அங்கு முன்பைவிட கடும் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.