மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. விவேக்கின் இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், நண்பர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளார்கள்.
மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்படவுள்ளது. 78 குண்டுகள் முழங்க விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கிறது.
தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு. விவேக் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும் அன்னாரின் கலை மற்றும் சமூகச் சேவையினைக் கெளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதிச்சடங்குகளின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என இன்று மதியம் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டது.