மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தனுஷ்: அறிவிப்பு

கர்ணன் படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜும் நானும் மீண்டும் கைகோர்க்கிறோம்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் தனுஷ்: அறிவிப்பு

கர்ணன் படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படம் - கர்ணன். தனுஷ் கதாநாயகனாக நடித்தார். தயாரிப்பு - தாணு, இசை - சந்தோஷ் நாராயணன். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோரும் இப்படத்தில் நடித்தார்கள். 

சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் கர்ணன் படம் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியானது. ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் கர்ணன் படத்தை வெகுவாகப் பாராட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் மீண்டும் நடிக்கவுள்ளதாக தனுஷ் அறிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் தனுஷ் தெரிவித்ததாவது:

கர்ணன் படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜும் நானும் மீண்டும் கைகோர்க்கிறோம். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று அறிவித்துள்ளார். 

கர்ணன் படத்துக்கு அடுத்ததாக, தனது மூன்றாவது படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை இயக்குகிறார் மாரி செல்வராஜ். கபடி வீரரின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவுள்ளார். இதுபற்றி சினிமா எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: அடுத்த படத்துக்கான திரைக்கதைப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பதால் சற்று சுலபமாக உள்ளது. தற்போது ஒரு படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் துருவ் விக்ரம். அது முடிந்த பிறகு என்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றார்.

துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்த பிறகு தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com