ஆயிரத்தில் ஒருவன் படத்தின் பட்ஜெட்டை மாற்றிக் கூறியதாக வெளிப்படையாக இயக்குநர் செல்வராகவன் அறிவித்துள்ளார்.
கார்த்தி, பார்த்திபன், ரீமா சென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்தப் படம் தோல்வியடைந்தாலும், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறை இந்தப் படம் மறு வெளியீடாக திரையரங்குகளில் வெளியாகும்போதும், மக்கள் வெள்ளத்தால் புதிய படத்தைப் போல அரங்கம் நிறைந்த காட்சிகளாக காணப்படும்.
ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக கடந்த வாரம் செல்வராகவன் அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
இதையும் படிக்க | லவ் ஸ்டோரியுடன் சந்திக்க வரும் சாய் பல்லவி
இந்த நிலையில் அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், 'ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கான பட்ஜெட் ரூ.18 கோடி தான். ஆனால் படத்தின் மீதான மதிப்பை அதிகரிக்க படத்துக்கான பட்ஜெட் ரூ.32 கோடி என அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள் தனம். இந்தப் படம் படத்தின் உண்மையான பட்ஜெட் வசூலாகிவிட்டது. பொய் சொல்லக்கூடாது என கற்றுக்கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.