ப்ரமோவில் கண்ணம்மா எழுப்புகிற ஒரே ஒரு கேள்வி, இந்த வாரம் முழுவதையும் எதிர்பார்ப்புகளுடன் பார்வையாளர்களைப் பரபரப்பாக்கியிருக்கிறது.
பொதுவாகத் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்க்காதவர்களையும் பார்வையாளர்களைக் கொண்ட, ஒவ்வொரு நாளும் இடைவிடாமல் பார்க்க வைத்துக்கொண்டிருக்கும் விஜய் டிவி தொடர் பாரதி கண்ணம்மா.
ஏற்கெனவே, 'குழந்தை பிறந்தால் ஆபத்து, உங்கள் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது, கருவைக் கலைத்துவிடுங்கள்' என்ற டாக்டரின் ஆலோசனையை மீறிக் குழந்தையைச் சுமந்துகொண்டிருக்கும் அஞ்சலி, டென்ஷனில் இருக்கிறார்.
திடீரென அஞ்சலி மயக்கமடைய, பாரதியும் தொலைபேசியை எடுக்காத நிலையில், அந்த நேரத்தில் அங்கே வந்த வெண்பாவைப் பரிசோதனை செய்யுமாறு மாமியார் சௌந்தர்யா சொல்ல, வெண்பாவுக்கு அஞ்சலி பற்றிய உண்மை தெரிந்துவிடுகிறது.
வாலன்டியராக வந்து வண்டியிலே ஏறினால்... இடையில் புகுந்துவிட்ட வெண்பா, டாக்டர் பாரதியின் முகவரித் தாளிலேயே அஞ்சலியின் உயிருக்கு இருக்கும் ஆபத்தை விரைவுபடுத்தக்கூடிய மாத்திரைகளை எழுதிக் கொடுக்கத் திட்டமிட்டுத் தாள்களையும் களவாடிச் செல்கிறார்.
என்னடா, இது மறுபடியும் முதலில் இருந்தா? கண்ணம்மாவுக்குக் கொடுத்த இம்சைகளை எல்லாம் அஞ்சலிக்குக் கொடுக்கப் போகிறாரா வெண்பா? அகிலன் என்ன செய்யப் போகிறார்? வரும் வாரம் முழுவதும் மறுபடியும் வெண்பாவின் சதித் திட்டங்களைத்தான் பார்க்க வேண்டியிருக்குமோ என்று கொஞ்சம் சலிப்புடன் நினைத்துக் கொண்டிருந்தால்...
இந்த வாரத்துக்கான ப்ரமோவில் எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு அதிரடித்துவிட்டிருக்கிறார்கள்.
கதையின் முக்கியமான முடிச்சுகளில் ஒன்றில் கைவைத்துப் பார்வையாளர்களைப் பதற வைத்திருக்கிறார்கள்.
மீண்டும் தலைவலி வர, ஒரு டாக்டரைப் பார்க்கச் செல்கிறார் கண்ணம்மா.
'சௌந்தர்யா உங்கள் மாமியார்தானே' என்று கேட்ட டாக்டர், 'உங்களுடைய இரு குழந்தைகளும் நன்றாக இருக்கிறார்களா?' என்கிறார்.
'இரட்டைக் குழந்தைகளா?' அதிர்ச்சியடைகிறார் கண்ணம்மா.
அடுத்த ஷாட் - தொலைபேசியில் அத்தை சௌந்தர்யாவிடம் பேசுகிறார் கண்ணம்மா, 'அத்தை, நான் கேட்கிற கேள்விக்கு உண்மையை மட்டும்தான் சொல்ல வேண்டும், எனக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்ததா?'
சௌந்தர்யா என்ன சொல்வார்? எப்படிச் சொல்வார்? எப்போது சொல்வார்? ம். எப்படியோ, ஒரு ப்ரமோவைப் போட்டு டென்ஷனிலேயே வைத்திருக்கிறார்கள் பார்வையாளர்களை!