'காஞ்சனா 3' படத்தில் நடித்த ரஷ்ய நடிகை அலெக்ஸாண்டிரா ஜாவி மர்மான முறையில் மரணமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான படம் 'காஞ்சனா 3'. இந்தப் படத்தில் வேதிகா, ஓவியா, கோவை சரளா, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நகைச்சுவை கலந்த திகில் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தை குடும்பம் குடும்பமாக திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த நிலையில் 'காஞ்சனா 3' படத்தில் சிறப்பு வேடத்தில் ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்ற நடிகை நடித்திருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து அருகில் வசிப்பவர்கள் கொடுத்த புகாரின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் அலெக்ஸாண்ட்ராவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். அலெக்ஸாண்ட்ராவின் மரணம் தற்கொலையா? கொலையா ? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.