நடிகர் பசுபதியின் புதிய ட்விட்டர் கணக்கை ரசிகர்களுக்கு நடிகர் ஆர்யா அறிமுகம் செய்து வைத்தார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்து கடந்த மாதம் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது. 70களின் பிற்பகுதியில் வட சென்னையில் நடைபெறும் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருந்தது.
இந்தப் படத்தில் நடிகர் ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் செல்லும் காட்சி இணையத்தில் மீம்களாக வைரலாகி வருகின்றன. இந்த நிலையில் நடிகர் பசுபதி ட்விட்டரில் தனது கணக்கைத் துவங்கினார். ஏற்கனவே அவரது பெயரில் போலி கணக்கு உள்ள நிலையில், பசுபதியின் உண்மையான ட்விட்டர் கணக்கை நடிகர் ஆர்யா அறிமுகம் செய்து வைத்தார்.
இதுகுறித்து நடிகர் ஆர்யா பதிவிட்டுள்ளதாவது, ''வாத்தியாரே இதான் ட்விட்டர் வாத்தியாரே, பாக்ஸிங்க விட ரத்த பூமி, உன்னோட பேருல இங்க நிறைய பேரு இருக்காங்கனு தெரிஞ்சதும், ஒரிஜினல் நான் தாண்டானு உள்ள வந்த பார்த்தியா , உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த வேர்ல்டு உள்ள போலாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த பசுபதி, ''ஆமாம் கபிலா பாக்ஸிங் தான் உலகம்னு இருந்துட்டேன். பரம்பரைக்கு ஒன்னுன்னா மொத ஆளா வந்துருவேன். நான் உன் சைக்கிள்ள பின்னாடி உட்கார்ந்துக்கிறேன். என்ன எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போ''என்று பதிலளித்துள்ளார்.