போதைப் பொருள் வழக்கில் சிக்கிய கன்னட நடிகைக்கு பதிலாக தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னட திரையுலகில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த வழக்கில் நடிகை ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி நைஜிரியாவைச் சேர்ந்த தாமஸ் என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட நடிகை சோனியா அகர்வால் உட்பட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள சோனியா அகர்வாலின் வீட்டில் இருந்து போதைப் பொருளைக் கைப்பற்றி, அவரைக் கைது செய்தனர்.
இந்த நிலையில் இந்த செய்தி தொடர்பாக சில ஊடகங்கள் தமிழ் நடிகை சோனியா அகர்வாலின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு நடிகை சோனியா அகர்வால் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில், ''என்னையும், என் குடும்பத்தினரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிய சில செய்தி நிறுவனங்கள் மீது புகார் அளிக்கவிருக்கிறேன். நான் தற்போது கேரளாவில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.