பனாமா பேப்பர்ஸ் வழக்கில் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடத்தியது.
கடந்த 2016-இல் பனாமாவின் சட்ட நிறுவனம் ஒன்றின் ரகசிய ஆவணங்கள் வெளியே கசிந்தன. இதன்மூலம், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்தவர்களின் பெயர் பட்டியல்கள் வெளியாகின. இதில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்பட மொத்தம் 300-க்கும் மேற்பட்ட பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை ஐஸ்வர்யா ராய்-க்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து, தில்லியிலுள்ள அமலாக்கத் துறை முன் ஐஸ்வர்யா ராய் திங்கள்கிழமை ஆஜரானார்.
இதையும் படிக்க | நடிகை ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறை விசாரணை
ஒரு பெண் அதிகாரி உள்பட 6 அமலாக்கத் துறை அதிகாரிகள் ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் ஐஸ்வர்யா ராய் வாக்குமூலத்தை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது. மேலும் சில ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து, மேலும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுமா என்பது குறித்து உறுதிபடத் தெரியவில்லை.
முன்னதாக, அவருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.