இந்த வருடப் பொங்கல் வெளியீடுகளில் மூன்று படங்களில் கதாநாயகிகளுக்குக் குரல் கொடுத்துள்ளார் நடிகை ரவீணா.
வழக்கமாக, திரையரங்குகளில் மட்டும் தான் புதுப்படங்கள் பண்டிகை சமயங்களில் வெளியாகும். இந்தமுறை மூன்று வகையில் புதிய படங்கள் வெளியாகவுள்ளன.
திரையரங்கில் இரு படங்கள், ஓடிடியில் ஒரு படமும் தொலைக்காட்சியில் ஒரு படமும் நேரடியாக வெளியாகவுள்ளன.
பொங்கலுக்கு ஜனவரி 13 அன்று விஜய் நடித்த மாஸ்டர் படமும் ஜனவரி 14 அன்று சிம்பு நடித்த ஈஸ்வரன் படமும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
மாதவன் நடித்த மாறா படம் அமேசான் பிரைம் ஓடிடியில் ஜனவரி 8 அன்று நேரடியாக வெளியாகவுள்ளது.
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்கிற படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இந்தப் படம் ஜனவரி 14 அன்று சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது.
இந்த நான்கு படங்களில் மூன்று படங்களில் கதாநாயகிகளுக்குக் குரல் கொடுத்துள்ளார் முன்னணி டப்பிங் கலைஞரும் நடிகையுமான ரவீணா. இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:
பொங்கல் 2021. மாஸ்டர் படத்தில் மாளவிகாவுக்குக் குரல் கொடுத்துள்ளேன். விஜய் படத்தில் மீண்டும் பணியாற்றியதில் மகிழ்ச்சி. பூமி, ஈஸ்வரன் படங்களில் நிதி அகர்வாலுக்குக் குரல் கொடுத்துள்ளேன். 3 பெரிய படங்களில் பங்களித்துள்ளேன் என்றார்.