கமல் ஹாசன் காலில் அறுவைச் சிகிச்சை: ஷ்ருதி, அக்‌ஷரா அறிக்கை

கமல் ஹாசன் காலில் அறுவைச் சிகிச்சை: ஷ்ருதி, அக்‌ஷரா அறிக்கை

அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். நான்கைந்து நாள்களுக்குப் பின் வீடு திரும்புவார்.

நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனின் காலில் இன்று காலை அறுவைச் சிகிச்சை நடைபெற்றதாக அவருடைய மகள்கள் ஷ்ருதி, அக்‌ஷரா ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

தன் காலில் சிறு அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளப் போவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் சில நாள்களுக்கு முன்பு கூறினார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்பட்ட விபத்து காரணமாக, காலில் ஓா் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடா்ச்சியாக இன்னொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவா்கள் அறிவுறுத்தியிருந்தாா்கள். ஆகவே, காலில் சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளை புதிய விசையுடன் தொடருவேன். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையவழியாகவும், விடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறு இல்லாமல் நிகழும் என்று கூறினார்.

இந்நிலையில் கமலின் மகள்களான ஷ்ருதி, அக்‌ஷரா ஆகிய இருவரும் கமலின் அறுவைச் சிகிச்சை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இன்று காலையில் ராமச்சந்திரா மருத்துவமனையில் மருத்துவர் ஜே.எஸ்.என். மூர்த்தி ஒருங்கிணைப்பில் எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் மருத்துவர் மோகன் குமார் தலைமையில் எங்கள் அப்பாவுக்கு காலில் அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார். நான்கைந்து நாள்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாள்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com