பிக் பாஸ் நடிகை தற்கொலை!

பெங்களூரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் மன அழுத்தத்துக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார்..
படம் - twitter.com/BiggBoss
படம் - twitter.com/BiggBoss

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

2017-ல் உப்பு ஹுலி காரா என்கிற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் ஜெயஸ்ரீ ராமையா. கன்னட பிக் பாஸ் 3-ம் பருவத்தில் போட்டியாளராகப் பங்கேற்றார். 

கடந்த வருடம் ஜூலை 22-ல் ஃபேஸ்புக்கில், நான் விலகுகிறேன். இந்த மோசமான உலகம் மற்றும் துயரங்களில் இருந்து விடை பெறுகிறேன் என்று பதிவு எழுதினார் 29 வயது ஜெயஸ்ரீ. இதையடுத்து அவருடைய நண்பர்கள் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார்கள். இதனால் அவர் மனம் மாறினார். நான் நலமாக இருக்கிறேன். அனைவரையும் விரும்புகிறேன் என ஃபேஸ்புக்கில் பதிவு எழுதினார். பிறகு முதலில் செய்ததையும் ஃபேஸ்புக்கிலிருந்து நீக்கினார். 

இதன்பிறகு ஃபேஸ்புக்கில் லைவில் ஜெயஸ்ரீ பேசியதாவது:

விளம்பரத்துக்காக இதை நான் செய்யவில்லை. சுதீப் சாரிடமிருந்து பண உதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. என்னால் மன உளைச்சலைப் போராட முடியவில்லை. என்னுடைய சாவை நான் எதிர்பார்க்கிறேன். என்னிடம் பணம் உள்ளது. ஆனால் நிம்மதி இல்லை. தனிப்பட்ட முறையில் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறேன். சிறு வயது முதல் பலர் நம்பிக்கை துரோகம் செய்துள்ளார்கள். என்னால் இதிலிருந்து மீள முடியவில்லை என்றார். இதையடுத்து பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் அவரிடம் பேசி மன அழுத்தத்தைப் போக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் முதல் பெங்களூரில் உள்ள மறுவாழ்வு மையத்தில் மன அழுத்தத்துக்கு சிகிச்சை மேற்கொண்டு வந்தார் ஜெயஸ்ரீ. 

இந்நிலையில் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஜெயஸ்ரீ, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து காவல்துறை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். ஜெயஸ்ரீயின் இந்த முடிவு கன்னடத் திரையுலகை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com