சென்னை, ஜூலை 19: சொகுசு கார் இறக்குமதி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு தமிழக அரசு விதிக்கும் நுழைவு வரியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஜய்
வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், வழக்கை தள்ளுபடி செய்து, நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அந்தத் தொகையை முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். நடிகர்கள் முறையாகச் சரியான நேரத்தில் வரி செலுத்தி உண்மையான நாயகர்களாக இருக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் விஜய் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கார்களுக்கு நுழைவு வரி விலக்கு அளிக்க கோரி பல வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததால் விலக்கு கோரியதாகவும், இந்தியாவுக்குள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வரி செலுத்தாமல் காரை கொண்டு செல்லவே நுழைவு வரி விதிக்கப்படுகிறது. எனவே வரி விலக்கு கோரியதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.என். மஞ்சுளா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம். துரைசாமு, ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்கை தவறுதலாக இந்த அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கைச் சம்மந்தப்பட்ட நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டுமென உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டனர்.