நடிகர், நாடக ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்களைக் கொண்ட கிரேஸி மோகன் (66) மாரடைப்பு காரணமாக சென்னையில் 2019 ஜூன் 10 அன்று காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாடக உலகில் முத்திரை பதித்த கிரேஸி மோகன், திரைத் துறையிலும் கால் பதித்து, பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணியாற்றி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றார். நாடகங்களில் இவர் படைத்த மாது, ஜானு, சீனு உள்ளிட்ட கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. ‘அபூர்வ சகோதரர்கள்', ‘மைக்கேல் மதன காமராஜன்', ‘சதி லீலாவதி', ‘அவ்வை சண்முகி', 'காதலா காதலா', 'பஞ்ச தந்திரம்' உள்ளிட்ட 40-க்கும் அதிகமான படங்களில் வசனகர்த்தாவாகப் பணியாற்றியுள்ளார். நடிகராகவும் அவர் படங்களில் பங்கேற்றுள்ளார்.
கிரேஸி மோகனின் நினைவு தினமான இன்று, நடிகர் கமல் ஹாசன் ட்விட்டரில் கூறியதாவது:
நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன் என்று கூறியுள்ளார்.