மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழம்பெரும் ஹிந்தி திரைப்பட நடிகா் திலீப் குமாா் (98), குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். மத்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்.
திலீப் குமாருக்குச் சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து ஆக்சிஜன் உதவியுடன் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் மூச்சுத்திணறல் பாதிப்பிலிருந்து குணமாகியுள்ள திலீப் குமார் தற்போது வீடு திரும்பியுள்ளதாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.