ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் - காடன். ராணா டகுபதி, விஷ்ணு விஷால், ஜோயா போன்றோர் நடித்துள்ளார்கள். அசோக்குமார் ஒளிப்பதிவில் பிரபுசாலமன் கதை எழுதி இயக்கியுள்ளார்.
படம் குறித்து இயக்குநர் பிரபு சாலமன் கூறியுள்ளதாவது: பாரஸ்ட் ஆப் தி மேன்' என்று அழைக்கப்படுபவர் ஜாதவ் பியான்ங். ஒரு தனிமனிதனாக பிரம்மபுத்ரா கரையோரங்களில் 1350 ஏக்கர் பரப்பளவில் காடுகளை உருவாக்கிய மனிதன். கடந்த 2015-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வாங்கியவரும்கூட. இப்படி காடுகளின் மீது அக்கறை கொண்ட மனிதன், அநாதைகளாக்கப்பட்ட யானைகள் சென்று வந்த இடத்தில் கட்டப்பட்ட தடுப்புச்சுவரை உடைத்து எப்படி அதன் வழித்தடங்களை உருவாக்கி கொடுக்கிறார் என்று திரைக்கதை அமைத்தால் சிறப்பாக இருக்கும் என நினைத்தேன். அதுதான் இது. ஜாதவ் பியான்ங் மனிதரின் தோற்றத்தின் பாதிப்பில் உருவான அந்த காடன் தான் ராணா. காட்டுக்குள் யானைகள் வழித்தடத்தை மறித்து சுவர் எழுப்பும்போது அங்கே மற்ற யானைகள் தொந்தரவு இருக்கக்கூடாது என யானை பாகனாக வருபவர்தான் விஷ்ணு விஷால். படத்தின் தொடக்கத்தில் எதிர்மறை கதாபாத்திரம் மாதிரி இருந்தாலும் போகப்போக வனத்தின் முக்கியத்துவம், யானைகளின் பாதுகாப்பு என புரிந்துகொண்டு ஒரு கட்டத்தில் அந்த சுவரை இடிக்க தானும் போராட்டத்தில் இறங்கும் ஒரு மனிதாக மாறுவார். இந்தக் கதைக்குள் காதல் உள்ளிட்ட மற்ற மசாலா விஷயங்களுக்கு வேலை கிடையாது. காடுகளின் பின்னணியில் படம் உருவாகியுள்ளதால், அதன் பிரம்மாண்டத்தைத் திரையரங்கில் பார்த்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்றார். மார்ச் 26-ல் படம் வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியாகவுள்ள காடன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.