சென்னை: 'உன் வருகையால் நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்' என்று தனது மகன் பெயரை உலகுக்கு அறிவித்த பிரபல தமிழ் ஹீரோவிற்கு வாழ்த்துகள் குவிகிறது.
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. இவர் நடிகர் சிவகுமாரின் மகன் மற்றும் பிரபல நடிகர் சூர்யாவின் சகோதரராவார் இவர் கடந்த 2011-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது.
அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த அக்டோபர் மாதம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் 'உன் வருகையால் நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்' என்று தனது மகனுக்கு வைக்கப்பட்டுள்ள பெயரை உலகுக்கு அறிவித்துள்ள நடிகர் கார்த்திக்கு வாழ்த்துகள் குவிகிறது.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா’ என்று பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து சமூக வலைத்தளங்களில் கார்த்திக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.