சென்னை: குலை நடுங்க வைக்கிறார் மாரி செல்வராஜ் என்று கர்ணன் டீஸர் குறித்து பிரபல இயக்குநர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ்.
இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் குலை நடுங்க வைக்கிறார் மாரி செல்வராஜ் என்று கர்ணன் டீஸர் குறித்து பிரபல இயக்குநர் சுப்ரமணிய சிவா பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது
"எச்சரிக்கையாக இருங்கள்! நேற்று 'கர்ணன்' டீஸர் பார்த்தேன். குலை நடுங்க வைக்கிறார் மாரி செல்வராஜ். தனுஷ் என்ற அசுரனை எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடித்தான் ஆக வேண்டும் எனத் திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து, முடிவில் பயத்தையும் பதற்றத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக!"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.