கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆக்சிஜன், படுக்கை, மருந்துகளுக்கான உதவி கோரி 27 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று சோனு சூட் வேதனை தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கால் அவதிப்பட்ட பலருக்கும் உதவிகள் செய்து இந்திய அளவில் புகழ் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தின் மோகா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஊரடங்கு காலத்தில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்று சேர்வதற்கான போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்தார். புலம்பெயர் தொழிலாளர்கள் சிலரை விமானம் மூலமாகவும் சொந்த ஊருக்கு அனுப்பி வந்தார். இதுபோன்ற உதவிகளினால் திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை சோனு சூட் பெற்றார்.
இந்நிலையில் இந்தியாவில் நிலவும் கரோனா 2-வது அலையிலும் பலருக்கும் உதவி செய்து வருகிறார் சோனு சூட். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆக்சிஜன், படுக்கை, மருந்துகளுக்கான உதவி கோரி 27,538 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 70% தில்லி, 20% உத்தரப் பிரதேசம், 10% இந்தியாவின் இதர பகுதிகள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றார்.