சிம்பு, ஹன்சிகா நடித்த மஹா: ஓடிடியில் வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த இயக்குநர்
ஹன்சிகாவின் 50-வது படம் மஹா. அறிமுக இயக்குநர் யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ளார். கருணாகரன், தம்பி ராமையா போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - ஜிப்ரான்.
2015-ல் வெளியான வாலு படத்தில் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்தார்கள். இருவரும் காதலிப்பதாக அறிவித்தவர்கள் பிறகு கருத்துவேறுபாடு காரணமாகப் பிரிந்துபோனார்கள். மஹா படத்தின் மூலமாக இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் மஹா படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றது. 2021 கோடைகாலத்தில் படம் வெளியாகும் என அறிவித்தார் ஹன்சிகா. எட்செட்ரா நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தனக்குத் தெரியாமல் மஹா படத்தை முடித்து ஓடிடியில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் படத்தை வெளியிட தடை கோரி இயக்குநர் யு.ஆர். ஜமீல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
மஹா படத்தின் கதைக்குத் தேவையான காட்சிகளை எடுக்காமல் என்னுடைய உதவி இயக்குநரை வைத்து படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. எனக்குத் தெரியாமல் படத்தை எடிட் செய்து, டப்பிங் பணிகளில் ஈடுபட்டு, படத்தை வெளியிட முயற்சி நடைபெற்று வருகிறது. படத்தை இயக்க எனக்கு ரூ. 24 லட்சம் ரூபாய் வழங்குவதாகக் கூறிவிட்டு தற்போது ரூ. 8.15 லட்சம் மட்டுமே தந்துள்ளார்கள். எனவே சம்பளத்தின் மீதித்தொகையை வழங்க உத்தரவிட வேண்டும். என்னுடைய கதைக்கருவை வேறு சிலரை வைத்து படமெடுத்து முடித்ததற்காக ரூ. 10 லட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மே 19-க்குள் பதில் அளிக்கும்படி எட்செட்ரா தயாரிப்பு நிறுவனத்துக்கும் உதவி இயக்குநர் அஞ்சு விஜய், படத்தொகுப்பாளர் ஜான் ஆப்ரஹாம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்துள்ளது.