பெப்சி அமைப்பில் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் செல்வமணி கூறியுள்ளார்.
கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.
தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்காக இன்று ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். வங்கி பரிவர்த்தனை மூலமாக கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி அனுப்பியுள்ளார்.
திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் மே 31 வரை நடைபெறாது என பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி கூறியுள்ளார். கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறாத காரணத்தால், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள், நிகழ்ச்சிகளை நம்பியுள்ள தொழிலாளா்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள். இதையடுத்து பெப்சி அமைப்பில் உள்ள திரைப்படத் தொழிலாளர்களுக்கான நிவாரணத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் அஜித். வங்கி மூலமாக இந்தத் தொகையை அனுப்பியுள்ளதாக செல்வமணி இன்று கூறியுள்ளார்.
கடந்த வருடம் பிரதமா் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம், முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் மற்றும் பெப்சி தொழிலாளா்களுக்கு ரூ. 25 லட்சம் என நிதியுதவி அளித்தார் அஜித். இந்த வருடம் முதல்வா் நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சமும் பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ. 10 லட்சமும் வழங்கியுள்ளார்.