கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டுள்ளார் நடிகை கங்கனா ரணாவத்.
67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கங்கனா ரணாவத், சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வானார். பிரபல நடிகையாக உள்ள கங்கனா பெறவுள்ள 4-வது தேசிய விருது இது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார்.
கங்கனாவுக்கு கரோனா வைரஸ் தொற்று சமீபத்தில் உறுதியானது. இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து அவர் மீண்டுவிட்டார். இதுபற்றி இன்ஸ்டகிராமில் கங்கனா கூறியதாவது:
கரோனா பாதிப்பு தற்போது இல்லை என்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது. கரோனாவை எப்படி வீழ்த்தினேன் என்பது பற்றி சொல்ல நிறைய உள்ளது. ஆனால் கரோனா ரசிகர் மன்றங்களை புண்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். வைரஸை மரியாதை குறைவாகப் பேசினால் சிலர் புண்படுகிறார்கள். அனைவருடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.