அஜய் தேவ்கன் நடித்து வரும் மைதான் படத்தை ஓடிடியில் வெளியிடுவது குறித்த முடிவை இன்னும் எடுக்கவில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.
1952-1962 காலக்கட்டத்திலான இந்தியக் கால்பந்தின் நிலைமையை விவரிக்கும் விதத்தில் மைதான் என்கிற ஹிந்தி படம் உருவாக்கப்பட்டு வருகிறது. 1950 முதல் 1963 வரை இந்தியக் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹிம் வேடத்தில் அஜய் தேவ்கன் நடித்துள்ளார். அஜய் தேவ்கன், ப்ரியா மணி போன்றோர் நடித்து வரும் இப்படத்தை அமித் ஆர். சர்மா இயக்கி வருகிறார்.
இந்தப் படம் முதலில் 2020 டிசம்பர் 11 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 2021 ஆகஸ்ட் 13 அன்று மைதான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிந்திப் படமான மைதான் - தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் சல்மான் கான் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான ராதே படம் போல மைதான் படமும் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் எனச் செய்திகள் வெளிவந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் அதை மறுத்துள்ளது.
மைதான் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தற்போது அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு படத்தை முடிக்க வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கமாக உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.