தற்போதைய சூழலால் ஒரு படத்தை ரசிக்கும் விதமே மாறிவிட்டது எனப் பிரபல நடிகை தமன்னா கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்குத் திரையுலகங்களில் பிரபல நடிகையாக உள்ள தமன்னா, இணையத் தொடர்களிலும் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவான நவம்பர் ஸ்டோரி என்கிற இணைய தொடர் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியானது.
இந்நிலையில் ஓடிடியில் படம் பார்க்கும் தன்மை பற்றி தமன்னா கூறியதாவது:
சினிமாவா இணைய தொடரா என்று தேர்வு செய்வதில்லை ஒன்றுமில்லை. எனக்கு இரண்டில் இருந்தும் வாய்ப்புகள் கிடைத்துள்ளன. 10 வருடங்களுக்கு முன்பு கிடைத்த ரசிகர்கள் வரவேற்பு இப்போது கிடைக்குமா எனத் தெரியவில்லை. கரோனா அச்சுறுத்தல் காரணமாக படங்கள் தொடர்பான உணர்வுகள் வேறாக உள்ளன. சினிமாவைப் பார்க்கும் விதமே மாறப் போகிறது.
நட்சத்திரம் என்பதன் முக்கியத்துவமே மாறி வருகிறது. மக்கள் உள்ளடக்கம் உள்ள படங்கள், இணையத் தொடர்களைப் பார்க்கிறார்கள், நல்ல உள்ளடக்கம் உள்ள படைப்புகளை ரசிக்கிறார்கள். தனிப்பட்ட நடிகர், தனிப்பட்ட திறமைகளுக்காக மட்டும் ரசிப்பதில்லை.
10 வருடங்களுக்கு முன்பு நான் பார்த்த ரசிகர் கூட்டம் இயற்கையானது. அதன் அனுபவம் அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது என்றார்.