பிரபல நடிகர் அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கம் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய இதிகாச தொடரான ராமாயணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற தொடர். இந்தத் தொடரில் ராவணனாக நடித்தவர் அரவிந்த் திரிவேதி. எதிர்மறை கதாப்பாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய நடிப்பாற்றலால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார்.
ஹிந்தி மற்றும் குஜராத்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். மேலும் கடந்த 1991 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பியாக இருந்துள்ளார். மேலும் திரைப்படத் தணிக்கைக் குழுவின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவரது சகோதரர் உபேந்திரா திரிவேதியும் பிரபலமான நடிகர்.
நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அரவிந்த் திரிவேதி நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 82. அவரது மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் திரிவேதியின் மறைவு குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில், சிறந்த நடிகரும், சமூக சேவகருமான அரவிந்த் திரிவேதியை இழந்து விட்டோம். தலைமுறைகள் கடந்து ராமாயணம் தொடருக்காக அவர் என்றும் நினைவில் கொள்ளப்படுவார் என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.