வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறு நடிகர் நடிக்கவிருப்பதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதன்முதலாக வெளியான படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் சிவகார்த்திகேயனின் திரையலக வாழ்க்கையில் மிக முக்கிய வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.
இந்தப் படத்தையடுத்து பொன்ராமும், சிவகார்த்திகேயனும் இணைந்து ரஜினி முருகன், சீம ராஜா ஆகிய படங்களில் பணியாற்றினர். இதில் சீம ராஜா திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. தற்போது சசிக்குமார் மற்றும் சத்யராஜ் நடிப்பில் எம்ஜிஆர் மகன் என்ற படத்தை பொன்ராம் இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனையடுத்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். இந்த நிலையில், இயக்குநர் பொன்ராம் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் இரண்டாம் பாகம் வருவது உறுதி. சிவகார்த்திகேயன் சார் முதிர்ச்சியான நடிகராக மாறிவிட்டார். அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் எடுப்போம். போட்றா வெடிய என்று தெரிவித்துள்ளார்.